உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஞானவாபி மசூதியில் பழங்கால இந்து கோயில் இருந்ததாக கூறி 4 பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மசூதியில் ஆய்வு மேற்கொள்ளலாம் என்று கடந்த 21-ஆம் தேதி அனுமதி வழங்கியது. மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியை ’பாதுகாக்கப்பட்ட பகுதி’ என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதால், அந்த பகுதியை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் ஆய்வு நடத்த அனுமதி வழங்கி உள்ளது. மேலும், ஆய்வு தொடர்பான அறிக்கையை வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாரணாசி நீதிமன்ரம் அனுமதி வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்ரத்தில் மசூதி நிர்வாகிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை இந்தியத் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மசூதி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து, மசூதி சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆய்வுக்கு தடைவிதிக்கக்கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் நடந்த நிலையில், ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மசூதி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.